ஆழ்மன ஆராய்ச்சி

ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில்
ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.


அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது. Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?
ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

”அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.”

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.

சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.

எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். “கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது”.


அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர். ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.

(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.

1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.

முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.

அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது” என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.

எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?
மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர். (விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?)

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.
1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.


அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.